சுமை அறியா கர்ப்பப்பை | sumai ariya karppapai
அழுது தினமும் புலம்புகிறேன்
கர்ப்ப பை காலியோடு வாடுகிறேன்
சோகத்தின் வெறுப்பிடமாய் திகழ்கிறேன்
இன்றாவது நற்செய்தியா? வேண்டுகிறேன்!
கர்ப்பபை சுமை நான் அறிய
சிறிது கல்லையாவது சுமந்திருக்கலாம்!
மலடிப்பட்டம் நான் சுமக்க
உயிரை பருகுது ஊராரார் வார்த்தை!
தானம் தர்மம் அள்ளிக் கொடுத்தாலும்
தாயுள்ளம் கொண்டவள் நானென்று
எவரும் சொல்ல மாட்டார்கள்
பிரசவம் ஒன்றை நான் காணும் வரை!
கடை வீதி பொம்மைகள் எல்லாம்
சீவி சிங்காரித்து ஆடை உடுத்தி
உயிர் பெற்று இருக்கிறது என் வீட்டில்!
தாய் உணர்வறியா பிரம்மா நான் !
ஊமைக்கு உதவாத நாவு போல
மலடிக்கும் கர்ப்பப்பை உண்டு
என்றாவது தீர்வு கிட்டும் என்ற
ஏக்கம் மட்டும் கடைசி வரை உண்டு!
மழலை வேண்டி சென்ற கோயில் எல்லாம்
என் பாத சுவடை உணர்ந்திருக்கும்
வந்து விட்டால் மலடி என்று
கடவுளிடம் வரம் வேண்டி உரைத்திருக்கும்!
அன்னை ஆகும் எண்ணத்தை
அறிவியலும் தகர்த்து விட்டது
அறிவியலுக்கு அறிவு இருக்கு
அறிவியலுக்கு உணர்வு இல்லை!
மனம் ஓய்வெடுக்க மரணம் தான்
முடிவென்று நான் என்னும் வரை
நானும் வாழ்ந்து பார்ப்பேன்
மழலை ஒன்றை சுமந்திட!
மகனோ மகளோ உறவொன்று வேண்டும்
இறந்த பின்பு கட்டி அணைத்து
இதழ் திறந்து காதோடு சொல்ல வேண்டும்!
என்னைப் பெத்த அம்மா !