பகலிலும் நிலவு - வரதட்சணை - புன்னகை

பகலிலும் நிலவு

ஆதவன் இருக்கும்
பகலிலும் ...

அந்தி நிலா
தெரிகிறது

எனக்கு மட்டும் ...!


" உன் முகம் "

வரதட்சணை

தட்சணை வாங்கும் மனிதா நீ வாழ என்ன கொடுத்தாய்...!!

புன்னகை

அழகும் நிறமும்
கண்களைக் கவரும்.
ஆனால்...

புன்னகை மட்டுமே
"இதயத்தை" கவரும்...

சோ
ஸ்மைல் ப்ளீஸ்..............

கற்றுக் கொடுத்தது

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.

கனவு

உன்னை கனவிலாவது காணலாம் என்று கண்ணை மூடினேன் .
ஆனால் உன் நினைவு நெருஞ்சி முட்கள் எண்ணி தைத்ததால் வந்தது கனவில்லை.
கண்ணீர் .

மனப்பாட மீன்குட்டி

குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.

செவ்வாய் தோஷம்

உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்து பிடிக்கிறதே
இதுதான் செவ்வாய் தோஷமோ

தேடிச் சோறுநிதந் தின்று - மகாகவி பாரதி

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பஞ்சின் கனவு

இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

கேள்வி

யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது

பொறுமை

பொறுமையால் நீ ஆயிரம் முறை
கூட தோற்று இருக்கலாம்....

ஆனால்,

அவசரத்தால் நீ ஒரு முறை
கூட ஜெயித்திருக்க
முடியாது........

முடிவு

ஒவ்வோர் இரத்தப்பிரிவு கொண்டவர்களுக்கும்
குண நலன்களையடக்கிய
பட்டியலொன்று
எனக்கு மின்னஞ்சலில் வருவதற்குமுன்புவரை

முடிவுகள் எடுப்பதில்
மிகவும் தாமதிக்கும் நான்

சட்டென மாற்றிக்கொண்டேன்
எனது முடிவை.

என் இரத்தப்பிரிவின்படி
நான்
விரைந்துமுடிவெடுப்பவராம்.

காதல் சுவாசம்

இப்படி காதல் காதல் என்று
புலம்பி கொண்டிருக்கிறாயே
உனக்கு அலுக்க வில்லையா? என்கிறாய்
சுவாசிப்பதற்கு கூட
அலுக்குமா என்ன

இடைவெளியின் தூரம்

கண்ணீரோ கன்னம் நனைக்க
வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க
நெஞ்சமோ உன்னை நினைக்க
காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க
விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க
மரணமும் என்னை மறந்து போக
ஜனனமும் உன்னை நினைத்து உருக
எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்

நிம்மதி

யாருமே தொலைக்காத ஒன்றை
உலகமே இன்று வரை
தேடிக்கொண்டு இருக்கிறது.
- நிம்மதி

உயிர்க்காதல்

உன் காதல்
எனுக்கு உயிர் போல
அளிப்பாயா? அல்லது அழிப்பாயா?

தவளைகள்

இசைக்கருவி இல்லாமல்
இசையமைக்கும் இசையமைப்பாளர்கள்
தவளைகள்

வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

தீக்குச்சி

முத்தமிட்ட காரணத்தால்
இதழ் கருகியது
தீக்குச்சி

Post a Comment (0)
Previous Post Next Post